விருதுநகரில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரியை உடனே தொடங்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
விருதுநகரில், அச்சங்கத்தின் 16 ஆவது மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, தேசபந்து மைதானத்திலிருந்து தொடங்கிய பேரணியானது, பஜார், நகராட்சி சாலை, அருப்புக்கோட்டை சாலை வழியாக நிகழ்ச்சி நடைபெற்ற தனியார் திருமண மண்டபத்தில் முடிவடைந்தது.
அதைத்தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் ஜெயபாரத், லீலாவதி தலைமை வகித்தனர். இதில், தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்த அரசு மருத்துவக் கல்லூரியை விருதுநகரில் உடனே தொடங்க வேண்டும். ஆலங்குளம் அரசு சிமென்ட் ஆலையை புனரமைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். விருதுநகர் நகராட்சியின் எல்கையை விரிவுபடுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பயோமெட்ரிக் கதவை அகற்ற வேண்டும். அரசாணை 56 ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.
முன்னதாக தேனி வசந்தன் வரவேற்றார். மாநில துணைச் செயலாளர் சி.பாலச்சந்திரபோஸ் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார். வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சிவராமன் சமர்ப்பித்தார். முடிவில் நகர செயலாளர் பி.கருப்பசாமி நன்றி கூறினார்.
புதிய நிர்வாகிகள் தேர்வு: மாவட்டத் தலைவராக எம்.ஜெயபாரத், செயலாளராக மீ.சிவராமன், பொருளாளராக ஏ.ஜெயந்தி, துணைத் தலைவர்களாக சரவணக்குமார், காயத்ரி, துணைச் செயலாளர்களாக முத்துமுனியாண்டி, செந்தமிழ்செலவன் ஆகியோர் உள்பட 31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.