விருதுநகரில் மாநில அளவிலான கராத்தே போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் பூடோ- ரியோ கராத்தே பள்ளி, விருதுநகர் ரோட்டரி கிளப், ஒய்எம்சிஏ அசோசியேசன் இணைந்து 11 ஆவது ஆண்டாக இப்போட்டியை நடத்தின. இந்நிகழ்ச்சிக்கு விருதுநகர் ரோட்டரி சங்கத் தலைவர் விஜயகுமாரி, தொழிலதிபர் முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். கராத்தே போட்டியில் கோவை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி, சேலம், மேட்டூர், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், கட்டா என்ற தனித்திறன் போட்டி, குழு கட்டா, ஆயுத போட்டி உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிக்கு மதுரை மாவட்ட கராத்தே சங்க துணைச் செயலாளரும், தேசிய நடுவருமான ஜி. செல்வராஜ், பூடோ- ரியோ கராத்தே பயிற்சிப் பள்ளி நிறுவனர் ஜெயபால் மேற்பார்வையில் 13 நடுவர்கள் கலந்து கொண்டனர். இதில், வெற்றி பெற்றவர்களுக்கு ஒய்எம்சிஏ செயலாளர் பால்ராஜ், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். முடிவில், ஆலிஸ் தேவப்பிரியா நன்றி கூறினார்.