"கஜா' புயல் பாதித்த பகுதிகளில் அமைச்சர்களை முற்றுகையிடுவது திட்டமிட்ட அரசியல் என பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்தார்.
விருதுநகர் இந்து முன்னணித் தலைவர் மா. விக்னேசன் அஞ்சலி கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள வந்த பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் செய்தியாளர்களிடம் கூறியது:
"கஜா' புயல் குறித்த தமிழக அரசின் செயல்பாடு பாராட்டுக்குரியது. இந்த புயல் குறித்து வாதிடக் கூடிய நேரம் இதுவல்ல. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைவரும் ஒன்றிணைந்து உதவ வேண்டும். இந்த புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வாதிடலாம். கோரிக்கை விடுக்கலாம். அதை விடுத்து வன்முறையில் ஈடுபடக் கூடாது.
இப்புயலால் பாதிக்கப்பட்டவர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு உரிய நிதி வழங்கும். இப்புயல் குறித்து எதிர்கட்சிகள் குற்றம்சாட்டுவார்கள். அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அனைவரும் முன் வர வேண்டும். புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யச் செல்லும் அமைச்சர்களை முற்றுகையிடுவது என்பது இயல்பாக வந்த எழுச்சியாக தெரியவில்லை. இதில் திட்டமிட்டு அரசியல் நடக்கிறது. தமிழகத்தில் ஒரு குழு பின்னாலிருந்து செயல்படுகிறது. கேர ளாவில் சபரிமலை யாத்திரையை நிறுத்துவது தான் ஆளும் கட்சியின் கொள்கையாக இருக்கலாம். இதை அம்மாநில முதல்வர் நீதிமன்ற உத்தரவு மூலம் பயன்படுத்தி கொள்கிறார். நாத்திக வாதிகள், தனிப்பட்ட வாழ்க்கையில் வித்தியாசமாக வாழ்ந்து பெயர் பெற்றவர்கள் திட்டமிட்டு ஐயப்பன் புகழை குலைப்பவர்கள் சபரிமலை செல்வதற்கு பாதுகாப்பு வழங்குகிறது கேரள அரசு என்றார் அவர்.