அருப்புக்கோட்டை வட்டம் ராமானுஜபுரம் கிராமப் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைத்துத்தரப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ராமானுஜபுரம் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 900 பேர் வசிக்கின்றனர். இக்கிராமத்தை ஒட்டி மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலை அமைக்கப்பட்டபோது, சாலை விரிவாக்கப் பணிக்காக இக்கிராமத்தின் நிழற்குடை அகற்றப்பட்டது. அப்பகுதியில் மீண்டும் நிழற்குடை அமைக்கப்படவில்லை.
இந்நிலையில் இக்கிராம மக்கள் பல்வேறு அலுவல்கள் காரணமாக சார்பதிவாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சந்தை ஆகியவற்றிற்கு அருப்புக்கோட்டை நகருக்குச் சென்று திரும்புகின்றனர். தற்போது மழை, வெயிலுக்கு ஒதுங்கக் கூட இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். ஆகவே ராமனுஜபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் நிழற்குடை அமைத்துத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.