விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் பல்வேறு குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவரை போலீஸார் வியாழக்கிழமை இரவு கைது செய்தனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து பந்தல்குடி செல்லும் சாலையில் உள்ள ராமசாமிபுரம் பகுதியில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை சோதனையிட்டனர். அதில், இருவரிடமும் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட எந்தவொரு ஆவணமும் இல்லை.
எனவே, அவர்களை நகர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில், இருவரும் அருப்புக்கோட்டை ராமசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் (28) மற்றும் பாண்டி (44) என்பதும், அருப்புக்கோட்டை பகுதியில் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பலவற்றில் தேடப்படும் குற்றவாளிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.