சிவகாசி அருகே கல்லூரி மாணவர் கல்குவாரி தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த ராஜகுரு மகன் முத்துச்சாமி (18). இவர், இங்குள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்துள்ளார். இவர், கல்லூரிக்கு சரிவர செல்வதில்லையாம். இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன் கல்லூரிக்கு முத்துச்சாமி இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அப்போது, கல்லூரிக்கு ஒழுங்காகச் சென்று படிக்க வேண்டும் என ராஜகுரு திட்டினாராம்.
அதையடுத்து, முத்துச்சாமி வீடு திரும்பவில்லையாம். ராஜகுரு பல இடங்களில் மகனைத் தேடியுள்ளார். இதனிடையே, சிவகாசி அருகே அதிவீரன்பட்டி கண்மாய் பகுதியில் இரு சக்கர வாகனம் நிற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸார் அந்த வாகனத்தைக் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர்.
அதன்பின்னர், வெள்ளிக்கிழமை மாலை அதிவீரன்பட்டி கண்மாய் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரில் சடலம் மிதப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீஸார் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்தது முத்துச்சாமி என்றும், கைப்பற்றப்பட்ட இரு சக்கர வாகனமும் முத்துச்சாமியுடையது என்றும் தெரியவந்தது.
ஒழுங்காக படிக்குமாறு தந்தை திட்டியதால், முத்துச்சாமி கல்குவாரி தண்ணீரில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாக, போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்த புகாரின்பேரில், திருத்தங்கல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.