விருதுநகரில் சிதிலமடைந்து சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழும் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மேலரத வீதி அருகே பெருமாள் கோயில் தெருவில் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு உள்ளது. சிதிலமடைந்து இடியும் நிலையில் இக்கட்டடம் உள்ளதால், தற்போது இங்கு யாரும் வசிக்கவில்லை.
இப்பகுதியில் ஏராளமான வீடுகள் உள்ள நிலையில், வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு பயன்பாடற்று இருப்பதால், இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்களில் பலர் ஈடுபட்டு வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசிப்பவர்கள் இரவு நேரங்களில் நடமாட அச்சப்படுகின்றனர்.
மேலும், அப்பகுதியில் தெரு விளக்குகள் சரிவர எரியாமல் இருப்பதால், சமூக விரோதிகளுக்கு சாதமாக உள்ளது. எனவே, பாழடைந்து கிடக்கும் இக்கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, மாவட்ட நிர்வாகத்துக்கு இப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.