அருப்புக்கோட்டை வட்டம் செட்டிக்குறிச்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள நிழற்குடை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி அரசுக் கல்லூரி மாணவர்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் அருப்புக்கோட்டையிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கிராமத்தில் உள்ள மதுரைக் காமராஜர் பல்கலை.யின் உறுப்புக் கல்லூரியில் சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இந்நிலையில் இங்குள்ள பேருந்து நிறுத்தத்துக்கு மாணவர்கள் வந்துதான் அருப்புக்கோட்டை உள்ளிட்ட பிற ஊர்களுக்குச் செல்ல பேருந்தில் ஏறுகின்றனர். ஆனால் இப்பேருந்து நிறுத்தத்தில் வெயில், மழைக்கு ஒதுங்கக் கூட இடமின்றி அவர்கள் அவதியடைந்து வந்தனர். இதனிடையே மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இப்பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கும் பணிகள் கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டன. இதில் சுமார் 70 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில், அப்பணிகள் கடந்த பல மாதங்களாகக் கிடப்பில் போடப்பட்டு விட்டன.
இதனால் வெயில், மழைக்கு ஒதுங்க முடியாமல் மாணவர்கள் தொடர்ந்து அவதியடைந்து வருகின்றனர். எனவே இந்த நிழற்குடைப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் எனமாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.