விருதுநகர் மாவட்டம் திருச்சுழி காவல்நிலையத்தில் வழக்கு ஒன்றில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட வந்தவர், காவல்துணை ஆய்வாளர் மற்றும் காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்களை தாக்கினார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த திருச்சுழி காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சுழி அருகே செம்பொன்நெருஞ்சி கிராமத்தைச்சேர்ந்தவர் பாலமுருகன் (21). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மணல் திருட்டில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் பாலமுருகன் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்து திருச்சுழி காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட்டு வருகிறார். அதுபோல சனிக்கிழமையும் கையெழுத்திட திருச்சுழி காவல்நிலையத்துக்கு பாலமுருகன் வந்திருந்தார்.
ஆனால் அங்கு பணியிலிருந்த காவலர் பெருமாள், உயரதிகாரிகளிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பில் பேசிக்கொண்டு இருந்தாராம். ஆனால் தன்னை வேண்டுமென்றே காத்திருக்க வைத்ததாகக் கூறி காவலர் பெருமாளை, பாலமுருகன் திடீரெனத் தாக்கத் தொடங்கினாராம். இதைக்கண்ட காவல்துணை ஆய்வாளர் முத்து, பாலமுருகனைத் தடுக்க முயன்ற போது அவர் , முத்துவையும் கீழே தள்ளி கடித்தாராம். இதுதொடர்பாக பாலமுருகன் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.