விருதுநகர் அருகே 3 பள்ளி மாணவர்கள் மாயமானதால், அவர்களது பெற்றோர் புகாரின் பேரில் சூலக்கரை போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.
விருதுநகர் அருகே ப.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி (57). இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் இவரது இரண்டாவது மகன் சதீஷ் (14) மருளூத்து கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி விடுமுறை என்பதால் நண்பர்களுடன் விளையாட செல்வதாக வீட்டில் கூறி விட்டு புதன்கிழமை சென்றாராம். இந்நிலையில், அவர் வீட்டிற்கு வராததால் பல இடங்களில் தேடியும் காணவில்லையாம். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த முனிராஜ் மகன் மாதவன் (13), முத்தையா மகன் துளசிராஜன் (14) ஆகியோரும் காணாமல் போனது தெரிந்தது. மேலும், துளசிராஜன் பாட்டி வீட்டிலிருந்து ரூ. 25 ஆயிரம் திருடப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த 3 நாள்களாக உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் மாணவர்களை தேடிப் பார்த்தும் கிடைக்க வில்லை. இதையடுத்து சதீஷின் தந்தை தங்கப்பாண்டி சனிக்கிழமை அளித்த புகாரின் வழக்குப் பதிவு செய்த சூலக்கரை போலீஸார், மூன்று மாணவர்களையும் தேடி வருகின்றனர்.