அடிப்படை வசதிகள் கோரி ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு
விருதுநகர் அருகே உள்ள மேலசின்னையாபுரத்தில் ஊராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அ. சிவஞானத்திடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: விருதுநகர் அருகே உள்ள மேலசின்னையாபுரம் கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் உள்ளோம்.
இந்நிலையில் அருந்ததியர் தெரு மற்றும் 1ஆவது தெருவில் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. மேலும், எங்கள் பகுதிக்கு 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வருகிறது. பிற பகுதிகளுக்கு மட்டும் மூன்று நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.
தெரு விளக்குகள் நீண்ட நாள்களாக எரியவில்லை. நூறு நாள் வேலை வழங்குவதிலும் ஊராட்சிச் செயலர் பாரபட்சம் காட்டுகிறார். எனவே பாரபட்சமின்றி குடிநீர் வழங்க வேண்டும், நூறு நாள் வேலையை அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.