விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்தனர்.
அருப்புக்கோட்டை அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் (75). இவரது மனைவி மாரியம்மாள் (65).
இவர்கள் இருவரும் திங்கள்கிழமை அருப்புக்கோட்டையிலுள்ள தமது உறவினர் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
கோவிலாங்குளம் அருகே உள்ள மதுரை-தூத்துக்குடி நான்குவழிச்சாலைப் பிரிவுக்கு வந்தபோது, அவ்வழியாக வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சங்கரலிங்கம், மாரியம்மாள் தம்பதியை அருப்புக்கோட்டை தாலுகா காவல்துறையினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், சங்கரலிங்கம் மருத்துவமனைக்கு வரும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல் துறையினர் விபத்துக்கு காரணமான கார் ஓட்டுநரான விளாத்திகுளம் பழனிவேல்ராஜன் (28) என்பவரை கைது செய்தனர்.