விருதுநகர் மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கிக் கூறும் வகையிலான சுமார் 40 ஆயிரம் தபால்களில் முழுமையான முகவரி இல்லாதவற்றை, உரியவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என அஞ்சல் துறை நிர்வாகம் நிர்பந்தம் செய்வதற்கு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
விருதுநகரில் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் தபால்காரர்கள் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்களின் விருதுநகர் கோட்ட நிர்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு, கோட்டத் தலைவர் எம். சுப்பையா தலைமை வகித்தார். செயலர் எம். சோலையப்பன் பேசினார்.
இதில், மத்திய அரசின் திட்டம் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில், விருதுநகர் மாவட்டம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அவற்றில் முழுமையான முகவரி இல்லை. இதனால், ஊழியர்கள் அவற்றை வழங்க முடியாத நிலை உள்ளது.
ஆனால், அக்கடிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும் என, அஞ்சல் துறை நிர்வாகம் நிர்பந்தம் செய்கிறது. இச்செயலை ஏற்றுக்கொள்ள முடியாது. இதே நிலை தொடர்ந்தால், ஊழியர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். மேலும், அஞ்சல் துறையில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக மத்திய அரசு நிரப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.