சிவகாசியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை வழக்கில் 4 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
சிவகாசி வம்பு இழுத்தான் முக்குப்பகுதியைச் சேர்ந்தவர் கணபதி மகன் கருப்பசாமி(20). சுமைதூக்கும் தொழிலாளி. இந்நிலையில் வேலாயுதம்சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் அருகே இவர் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை சடலமாக கிடந்தார். இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில், முத்து கருப்பண்ணன் மகன் ஜெயகண்ணன்(20), முத்தையா மகன் மணிகண்டன்(21), பூமிநாதன் மகன் பால்பாண்டி(23), முத்துப்பாண்டி மகன் முத்துக்குமார்(23) ஆகியோர் கருப்பசாமியை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
இதில், கருப்பசாமி மது அருந்திவிட்டு ஜெயகண்ணன், பால்பாண்டி, முத்துக்குமாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் கடந்த 2017இல் ஏற்பட்ட தகராறில் ஜெயகண்ணனை, கருப்பசாமி அரிவாளால் வெட்டினாராம். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கருப்பசாமியின் உறவினர் பெண்ணை மணிகண்டன் காதலித்து வந்தாராம். இதற்கு கருப்பசாமி எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் 4 பேரும் சேர்ந்து கருப்பசாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை கருப்பசாமியை மது அருந்த வைத்து, வேலாயுதம் சாலைப் பகுதிக்கு அழைத்து வந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்ததாக போலீஸாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து சிவகாசி நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து 4 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனர்.