சிவகாசி சிவசுப்பிரமணியசுவாமி கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
இக்கோயிலில் ஜனவரி 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. தொடந்து தினசரி இரவு சுவாமி வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஜனவரி 17 ஆம் தேதி கோயிலில் கழுவேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளிக்கிழமை மாலை சுவாமி விருத்தன் அலங்காரத்தில் செண்பக விநாயகர் கோயில் தெப்பம்வரை சென்று, வள்ளிக்கு தபசு காட்சியளித்தார். தொடந்து அன்றைய இரவு திருக்கல்யாணம் நடைபெற்றது.
பின்னர் விழாவில் முக்கிய வைபவமான தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சுவாமி வள்ளி தெய்வானையுடன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தேர்வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதி வழியே சென்று நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு சுவாமியை வழிபட்டனர்.