வாக்குக்கு பணம், பொருள் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை தேர்தல் செலவின பார்வையாளர் தொடங்கி வைத்தார்.
ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் எதிரே மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. தவறாமல் வாக்களிக்க வேண்டும், வாக்குக்கு பணம், பரிசு வாங்காமல் வாக்களிப்பேன் என்ற உறுதிமொழி எடுத்து கொள்ளும் நோக்கில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை தேர்தல் செலவின பார்வையாளர் ஷீல் அசில் தொடங்கி வைத்தார்.
மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து சிவிஜில் என்ற செயலி மூலம், நேரடியாக தேர்தல் ஆணையத்திற்கு பொது மக்கள் புகார் அளிக்க முன் வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.