அருப்புக்கோட்டை நகரில் பிரதானச் சாலையோரம் குப்பைகளைக் கொட்டி எரிப்பதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருவதாகவும், இதை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருப்புக்கோட்டையிலிருந்து திருச்சுழி செல்லும் பிரதானச் சாலையில் சொக்கலிங்கபுரம் பகுதியில் உள்ள பிறமடை ஓடை அருகே காலியிடம் உள்ளது. இங்கு சிலர் அதிக அளவில் குப்பைகளைக் கொட்டி வருவதுடன் அவற்றுக்கு தீவைத்தும் செல்கின்றனர்.
இதனால் இப்பகுதியில் காற்று மாசு ஏற்படுவதுடன், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளுக்குக் கண் எரிச்சல் ஏற்பட்டு பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. மேலும் இதே பகுதியில் பள்ளிகள், கோயில்கள், மருத்துவமனைகளும் அமைந்துள்ளதால் பள்ளி மாணவர்களும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும், கோயிலுக்கு வரும் பக்தர்களும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
கடந்த பல மாதங்களாகப் பலமுறை நகராட்சியிடம் இதுபற்றி சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் குப்பைகள் எரிக்கப்படும் காலியிடம் அருகிலுள்ள மீனாட்சி சொக்கநாதர் ஆலயத்துக்குச் சொந்தமானது என்பதால் கோயில் நிர்வாகம் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து அங்கு குப்பைகள் கொட்டப்படுவதைத் தடுத்து தூய்மையாகப் பராமரிக்கவேண்டுமென சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.