திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில், உறவினரின் உணவகத்தைத் தீ வைத்து எரித்த முதியவர், புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
விக்கிரபாண்டியம் மேல அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சேகர் (54). இவர் அதே பகுதியில் உணவகம் நடத்தி வருகிறார். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது பெரியப்பா ச. முருகையனிடம் (90) ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தாராம். இதைத் திருப்பி செலுத்தாமல் இழுத்தடித்ததால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இருவரும் பிரச்னை குறித்து பேசியபோது, வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதைத்தொடர்ந்து, புதன்கிழமை அதிகாலை சேகரின் உணவகத்தின் மேற்கூரை தீப்பிடித்து எரிந்தது. இதில், உணவகத்தின் மேஜை, நாற்காலி மற்றும் மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன. தகவலறிந்து வந்த கோட்டூர் தீயணைப்புப் படையினர், தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இதுகுறித்து சேகர் விக்கிரபாண்டியம் போலீஸில் அளித்த புகார் மனுவில், தனது பெரியப்பா முருகையன் தான் இந்த சம்பவத்துக்கு காரணம் என குறிப்பிட்டிருந்தார். இதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து, முருகையனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.