திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தில் மின்கம்பங்களின் மீது சாய்ந்து விழுந்த மரங்களை அகற்றி, மின் இணைப்பு கிடைக்கும் வகையில், மின்வாரிய ஊழியர்களுக்கு உதவிகரமாக இருந்த இளைஞர்களையும், மாணவர்களையும் வர்த்தகர் சங்கம் பாராட்டியுள்ளது.
இதுதொடர்பாக நீடாமங்கலம் வர்த்தகர் சங்கத் தலைவர் பி.ஜி.ஆர். ராஜாராமன் விடுத்த அறிக்கை:
கஜா புயலால் நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் தஞ்சாவூர் சாலையில், மின்கம்பங்களின் மீது மரங்கள் விழுந்ததால், மின்வயர்கள் அறுந்து விழுந்தன. மின்வாரியத்தில் போதுமான பணியாளர்கள் இல்லாததால், நீடாமங்கலம் பகுதிக்கு மின்சாரம் கிடைக்காத நிலை
ஏற்பட்டது.
இதுதொடர்பாக விடுத்த அழைப்பை ஏற்று, 25 இளைஞர்கள் முன்வந்து மின்வாரிய ஊழியர்களுக்கு உதவி செய்தனர். இதனால், துரிதமாக மின்சாரம் கிடைத்தது. மின்சாரம் கிடைத்திட உதவிய மின்வாரிய ஊழியர்களுக்கும், மாணவர்கள், இளைஞர்களுக்கும் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.