கஜா புயலால் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பாதிப்புகளிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட்ட அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கஜா புயலின் தாக்கம் எதிர்பார்த்ததை விட பல மடக்கு அதிகமாக உள்ளது. தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டபோது இருந்த வேகம், தற்போது புயலுக்குப் பிறகு நிவாரணப் பணிகளில் இல்லை. பல இடங்களில் நிவாரணப் பணிகள் சுணக்கமாக நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 50 சதவீத சாலையோர மரங்களும், 70 சதவீத மின்கம்பங்களும் முறிந்து விழுந்துள்ளன. 80 சதவீத இடங்களில் மின் தடை உள்ளதால் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண முகாம்களில் உணவும், உரிய பாதுகாப்பும் அளித்து, மீண்டும் இயல்பு வாழ்க்கை திரும்பிய பிறகே அவர்களை வீட்டுகளுக்கு அனுப்ப வேண்டும். சேத மதிப்பீடு குறித்த கணக்கெடுப்பு நியாயமான முறையில் இருக்க வேண்டும்.
டெல்டா மாவட்டங்களில் 2 லட்சம் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தென்னை விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்று விட்டது. எனவே, ஒரு தென்னை மரத்துக்கு ரூ. 25,000 முதல் ரூ.30,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோல், கால்நடைகளை இழந்தவர்களுக்கும், மீனவர்களுக்கும் , உப்பளத் தொழிலாளர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும். சுமார் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் நாகை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் வலுவாக தாக்கியிருப்பதை உணர்ந்து மத்திய அரசு, தமிழகத்துக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.
மத்திய , மாநில அரசுகள் கணக்கெடுப்பை விரைவாக நடத்தி, அந்தந்த பகுதியில் குழு அமைத்து நியாயமான முறையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்றார் ஜி.கே.வாசன். பேட்டியின்போது, தமாகா மாநில நிர்வாகி சம்பத் மூப்பனார், திருவாரூர் மாவட்டத் தலைவர் குடவாசல் தினகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.