சண்டிகரில் நடைபெற உள்ள 25-ஆவது தேசிய சாகச விழாவுக்கு ஆர்வமுள்ள திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் (பொ) பாபு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சண்டிகர் நேஷனல் அட்வென்சர் கிளப் நடத்தும் 25-ஆவது தேசிய சாகச விழா 2.2.2019 முதல் 10.2.2019 வரை பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற உள்ளது.
இதில், மலையேறுதல், படகுப்பயணம், வில்வித்தை, துப்பாக்கிச் சுடுதல் ஆகிய சாகசப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இப்போட்டியில் பங்கேற்க கட்டணத்தொகை ரூ.5,000 செலுத்த வேண்டும்.
திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் ஆர்வமுள்ள இளைஞர்கள் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். மேலும், விவரம் மற்றும் விண்ணப்பப் படிவத்தை www.nacindia.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை nacindia@yahoo.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு நவம்பர் 30-க்குள் அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.