திருவாரூர் அருகே குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கக் கோரி சாலை மறியல் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலம், கருப்பூர், ஆண்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயல் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, கடந்த 5 தினங்களுக்கும் மேலாக மின்சாரம், குடிநீரின்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில், குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் வழங்காமல் அப்பகுதியில் உள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு மின் இணைப்பு வழங்கும் பணியில் 25-க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இதையறிந்த அப்பகுதி மக்கள், குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்காமல் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு முன்னுரிமை அளித்து மின்சார இணைப்பு வழங்குவதைக் கண்டித்தும், குடியிருப்பு வீடுகளுக்கு உடனடியாக மின்சாரம் வழங்க வலியுறுத்தியும் திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் அடியக்கமங்கலம் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். குடியிருப்பு பகுதிகளுக்கு மின் இணைப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த மறியலால் திருவாரூர்- நாகை சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல், திருவாரூர் பேருந்து நிலையம், கும்பகோணம் நெடுஞ்சாலையில் அரசவனங்காடு உள்ளிட்ட இடங்களிலும் மின்சாரம் வழங்கக் கோரி மறியல் போராட்டம் நடைபெற்றது.