திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே மின்சாரம், குடிநீர் கோரி, பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வலங்கைமான் அருகே உள்ள மேலவிடையல் ஊராட்சிக்குள்பட்ட பெரியார் காலனியில், 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கஜா புயலின் சீற்றத்தால் கடந்த 5 நாள்களாக இப்பகுதியில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் இல்லை. இதன் மீது அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர், வலங்கைமான்- குடவாசல் சாலையில், பெரியார் காலனி பேருந்து நிறுத்தம் அருகில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த வலங்கைமான் போலீஸார், சாலை மறியலில் ஈடுடடவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதன் காரணமாக சுமார் ஒரு மணிநேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.