திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் கே.சி. வீரமணி புதன்கிழமை ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலால் பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவின்படி, அமைச்சர் கே.சி.வீரமணி, போக்குவரத்து ஆணையர் சி. சமயமூர்த்தி ஆகியோர், பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து, சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர். திருவாரூர் ஊராட்சி ஒன்றியம், மருதப்பட்டினம் 21-ஆவது பகுதி தியாகி சின்னசாமி தெரு, அண்ணா காலனி, நேதாஜி சாலை, வண்டிகாரத் தெரு, கொடிக்கால் தெரு பின்புறம், மாரியம்மன் கோயில் தெரு, மஜீத் தோப்பு, திலகர் தெரு, கிடாரங்கொண்டான், அடியக்கமங்கலம், புது காலனி, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர், சேத விவரங்களைக் கணக்கெடுக்கும் பணி, மின்கம்பம் சீரமைப்புப் பணி, குடிநீர் விநியோகம் ஆகியவற்றை ஆய்வுசெய்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி, முதல்வர் உத்தரவின்படி நிவாரணம் விரைவில் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
தொடர்ந்து, திருவாரூர் ஒன்றியத்துக்குள்பட்ட புதூர் தெற்குத் தெரு, மாங்குடி, கடுகங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிவாரண முகாம்களில் உணவு தயார்செய்யும் அறைகளை ஆய்வுசெய்து, பொதுமக்களுக்கு மதிய உணவை அமைச்சர் கே.சி. வீரமணி வழங்கினார். இந்நிகழ்வில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வருவாய் கோட்டாட்சியர் முருகதாஸ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.