கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் நிவாரணப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு பல்வேறு அமைப்புகள், உணவு, உடை உள்ளிட்ட உதவிகள் செய்து வருகின்றன. அந்த வகையில், திருவாரூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் உணவு, பிஸ்கட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன. திருத்துறைப்பூண்டியில், சாய்ராம் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம், திருவாரூரில் நாரணமங்கலம் நிவாரண முகாம், மன்னார்குடி அருகே பாலையூர் நிவாரண முகாம் ஆகிய முகாம்களுக்கு சென்று நிவாரணப் பொருள்களை வழங்கினர். திருவாரூர் நாரணமங்கலம் முகாமில் உள்ளவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஆர். கலைமதி தலைமையில் நிவராணப் பொருள்கள் வழங்கப்பட்டன. இதில், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜேந்திரன், சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான ஆர். கோவிந்தராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.