திருவாரூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தலைமை வகித்தார். பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தரப்பில் 153 மனுக்கள் அளிக்கப்பட்டன. இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்படி உத்தரவிட்டார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ரெங்கநாதன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் இருதயராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.