திருவாரூர் அருகே இருசக்கர வாகனங்கள் திருடியவர்களை கைது செய்த போலீஸாருக்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மன்னார்குடி பகுதியில் இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவதாக கிடைத்த தகவலையடுத்து, திருட்டில் ஈடுபடும் மர்ம நபர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு, போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியவர்களைப் பிடித்து விசாரித்ததில், கண்டியூர், வீரசிகம் பேட்டை பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் (49), தண்டாலம் பகுதியைச் சேர்ந்த ராஜா (31) ஆகிய இருவரும் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.3,47,000 மதிப்பிலான 9 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
இருவரையும் கைது செய்து, சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொண்ட மன்னார்குடி நகர காவல் ஆய்வாளர் மணிவேல், உதவி ஆய்வாளர்கள் சதாசிவம், சங்கரன், கார்த்திகேயன், தலைமை காவலர் முருகானந்தம் ஆகியோருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் அண்மையில் பாராட்டுத் தெரிவித்தார்.