திருவாரூரில் லாரிகளை திருடிச் சென்ற வழக்கில் தலைமறைவாக இருந்தவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
திருவாரூர் நகர காவல் நிலையப் பகுதியில் லாரிகள் தொடர்ந்து திருட்டுப் போவதாக புகார் வந்ததைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் உத்தரவின்படி, தனிப்படை அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
இந்நிலையில், திருவாரூர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடியவரை பிடித்து தனிப்படை போலீஸார் விசாரித்ததில், அவர் கொரடாச்சேரி, கண்கொடுத்த வனிதம் பகுதியைச் சேர்ந்த விஜய் (24) என்பதும், காணாமல் போன 2 லாரிகளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடமிருந்து 2 லாரிகளும் மீட்கப்பட்டன. தொடர் விசாரணையில், விஜய் கடந்த 2016-ஆம் ஆண்டு வழிப்பறி வழக்கில் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டு, ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, திருவாரூர் நகர போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையொட்டி, திருவாரூர் நகர காவல் ஆய்வாளர் கண்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வி. விக்ரமன் பாராட்டினார்.