வலங்கைமான் சுள்ளானாற்றில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி, விவசாயிகள் புதன்கிழமை (செப்.26) சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் மற்றும் குடவாசல் தாலுகாக்களில் உள்ள நரசிங்கமங்கலம், காங்கேயம் நகரம், ஓலையாமங்கலம், ஆலடிக்கருப்பூர், கீழ நல்லம்பூர், பூண்டி, பண்டதசோழ நல்லூர், ராம்நகர், ஆண்டாங்கோயில், மேலவிடையல், குளக்குடி, சித்தன்வாழூர் உள்ளிட்ட கிராமங்கள் சுள்ளானாறு மூலம் பாசனவசதி பெற்றுவந்தன. சுமார் 10 ஆண்டுகளாக சுள்ளானாற்றில் தண்ணீர் வராததால், விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
நிகழாண்டு மேட்டூர் அணை இருமுறை நிரம்பியபோதிலும், மேற்கண்ட கிராமங்களுக்கு சுள்ளானாற்றின் மூலம் தண்ணீர் வராததைக் கண்டித்து, வலங்கைமான் சுள்ளானாற்று பாலத்தில் விவசாயிகள் புதன்கிழமை (செப்.26) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சுள்ளானாறு பாசனதாரர்கள் சங்கத்தலைவர் என். தெட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.