ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 22- ஆவது நாளாக திருக்காரவாசலில் காத்திருப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருக்காரவாசலில் செயல்படுத்தப்பட உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டக் குழு அமைக்கப்பட்டு, ஜனவரி 27-ஆம் தேதி முதல் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தில் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்று, ஆதரவு தெரிவித்துச் செல்கின்றனர். இப்போராட்டத்தின் 22- ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் பங்கேற்று, போராட்டக்குழுவுக்கு ஆதரவு தெரிவித்து பேசினார்.