நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில், வடுவூர் சாத்தனூர் கிராமத்தில் அண்மையில் நிலக் கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.
பயிற்சியில், மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் அனுராதா பேசியது: நிலக் கடலையில் விதை நேர்த்தியின் முக்கியத்துவம் மற்றும் அதனால் விதை மற்றும் மண் மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம் என்பது குறித்தும், உர மேலாண்மை முறைகள் குறித்து பேசினார். பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா. ரமேஷ் பேசியது: ஏக்கருக்கு 50 கிலோ விதையை பயன்படுத்தி (பெரிய விதை ரகங்களுக்கு 15 சதவீத அளவு கூடுதலாக விதையை பயன்படுத்த வேண்டும்) வரிசைக்கு வரிசை 30 செமீ செடிக்கு செடி 10 செமீ இடைவெளி இருக்குமாறு வரிசையில் ஒரு குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும்.விதைத்த 40 முதல் 45 நாள்களுக்குள் ஜிப்சம் ஒரு ஏக்கருக்கு 160 கிலோ வீதம் மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும், பரிந்துரைக்கப்பட்ட ஜிப்சத்தின் பாதியளவை ரசாயன உரங்களுடன் கலந்து அடியரமாகவும் இடலாம். தவிர, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக நிலக்கடலை ரிச் என்ற நுண்ணூட்டக் கலவையை ஏக்கருக்கு 2 கிலோ என்ற அளவில் கலந்து இலைத் தெளிப்பாக பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் தெளிப்பதால் பூக்கள் கொட்டாமை, காய் நெற்று நிரப்புதல் மற்றும் வறட்சியைத் தாங்கும் தன்மை பயிருக்கு உண்டாகிறது என்றார். இதில், வடுவூர் சாத்தனூர் கிராமத்தைச் சார்ந்த 30 விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.