திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அணையிலிருந்து பிசான சாகுபடிக்கு செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் 12 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும்.
திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி, திசையன்விளை, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் வட்டார விவசாய நிலங்களுக்கு பிசான சாகுபடிக்காக மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதையேற்று, மணிமுத்தாறு அணையிலிருந்து டிச. 11முதல் தண்ணீர் திறக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி செவ்வாய்க்கிழமை, மணிமுத்தாறு அணையிலிருந்து சேரன்மகாதேவி சார்ஆட்சியர் ஆகாஷ் தண்ணீரைத் திறந்துவிட்டார். பின்னர் அவர் கூறியது: செவ்வாய்க்கிழமை முதல் (டிச. 11) 2019, மார்ச் 31 வரை 440 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மணிமுத்தாறு அணையின் 3, 4ஆவது பிரிவுகளின் கீழ் உள்ள 12,018 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். விவசாயிகள் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறவேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், தாமிரவருணி வடிநீர் கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார், உதவி செயற்பொறியாளர்கள் சிவக்குமார், பழனிவேல், உதவிப் பொறியாளர்கள் கார்த்திகேயன், மாரியப்பன், ரமேஷ், அணைக் கண்காணிப்பாளர் காளிகுமார், அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி, வேளாண்மை உதவி இயக்குநர் பழனிவேலாயுதம், தொழில்நுட்ப மேலாளர் சுஜித், அணை லஸ்கர் கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.