திருநெல்வேலி சந்திப்பில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டார்.
திருநெல்வேலி சந்திப்பில் மேற்கு வாசல் அருகே கடை முன்பு இளைஞர் சடலமாகக் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநெல்வேலி நகரம் காவல் உதவி ஆணையர் கிருஷ்ணசாமி, சந்திப்பு காவல் நிலைய ஆய்வாளர் வனசுந்தர் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சடலமாகக் கிடந்தவர் பாளையங்கோட்டை அருகே மேலப்பாட்டத்தில் உள்ள கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் மகன் வினோத் என்ற சீவலப்பேரியான் (35) என்பது விசாரணையில் தெரியவந்தது. தாய், தந்தையைப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த வினோத் மீது மிரட்டல், பணம் பறித்தல் உள்ளிட்ட வழக்குகள் இருந்ததாம். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மர்மநபர்களால் கம்பியால் தாக்கப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகள் குறித்து அப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.