திருநெல்வேலியில் ஓடும் பேருந்தில் பணம் திருடியதாக பெண்ணை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
திருநெல்வேலி சந்திப்பு, சிந்துபூந்துறையைச் சேர்ந்தவர் மேரி. இவர், தனியார் பேருந்தில் திருநெல்வேலி சந்திப்பில் இருந்து நகரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது பையில் வைத்திருந்த ரூ.5 ஆயிரத்தை, சக பெண் பயணி ஒருவர் திருடியதை அருகிலிருந்தவர்கள் பார்த்தனராம். உடனே, அவரைப் பிடித்து திருநெல்வேலி சந்திப்பு குற்றப்பிரிவு போலீஸில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள காட்டுநாயக்கன்புதூரைச் சேர்ந்த சீதாலட்சுமி (25) என்பதும், பணத்தை திருடியதும் தெரியவந்ததாம். இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.
மற்றொரு திருட்டு: பாளையங்கோட்டை, தியாகராஜர் நகர் 4 ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (56). சுகாதார துறையில் பணியாற்றி வருகிறார். இவர், தனது குடும்பத்தினருடன் தென்காசியில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததுடன், வீட்டிலிருந்த 6 பவுன் தங்க நகை மற்றும் ரூ .42,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.