காவல்துறை நடவடிக்கையைக் கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வ.உ.சி. நினைவு தினத்தையொட்டி, அக்கட்சி நிர்வாகிகள் திருநெல்வேலி மாநகராட்சித் திடலிலுள்ள மணிமண்டபத்தில் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவிக்க வந்தனர். இதற்கு, மாநகர காவல்துறை அதிகாரிகள் அனுமதி மறுத்தனர். இதையடுத்து, பாளையங்கோட்டையில் விளையாட்டு மைதானத்திலுள்ள வ.உ.சி. சிலைக்கு கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். பின்னர், அவர்கள், காவல்துறையின் நடவடிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கட்சியின் மாநகர் மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் கோ. துரைபாண்டியன், இளைஞரணி அமைப்பாளர் ஜெகன்பாண்டியன், மாவட்ட மாணவரணி நிர்வாகி முத்துபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.