பாளையங்கோட்டை, கக்கன்நகர் மற்றும் என்ஜிஓ காலனி பகுதிகளில் நேரிட்ட விபத்துகளில் காயமடைந்த இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள பாளையஞ்செட்டிக்குளம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பாண்டியன் மகன் வேல்முருகன் (42). ஊர்க்காவல் படை வீரராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி தனது மோட்டார் சைக்கிளில் கக்கன்நகர் பகுதியில் சென்றபோது, மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதாகக் கூறப்படுகிறது.
இதேபோல், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியை சேர்ந்தவர் ஜெயபால் (70) என்பவர் அதே பகுதியில் சில தினங்களுக்கு முன்பு சாலையைக் கடக்க முயன்றபோது, அவ்வழியாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதியதாம். இச்சம்பவங்களில் பலத்த காயமடைந்த இருவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், புதன்கிழமை உயிரிழந்தனர். இவை குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்கள்.