பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் பழுது நீக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட மின் ஊழியர், மின் கம்பம் முறிந்து விழுந்ததால் பலத்த காயமடைந்தார்.
பாளையங்கோட்டை முருகன்குறிச்சி பகுதியில் ஒரு கடைக்கு சென்ற மின் கம்பியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்ய, மின் கம்பத்தில் மின் ஊழியர் திங்கள்கிழமை ஏறியுள்ளார். ஏற்கெனவே, அந்த மின்கம்பத்தின் அடிப்பகுதியும் அரித்து பலமிழந்த நிலையில் இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் மின் கம்பத்தில் ஏறியதால், அது திடீரென முறிந்து அருகில் உள்ள கட்டடத்தின் மீது சாய்ந்தது. இதனால், மின் ஊழியர் நிலைகுலைந்து கீழே விழுந்ததில் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதேபோல், மாநகரின் பல பகுதிகளில் மின் கம்பங்கள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றை சரி செய்ய மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.