பாளையங்கோட்டை மற்றும் பேட்டை பகுதிகளில் தொடர் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான 26 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
பாளையங்கோட்டை தியாகராஜநகர், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சில நாள்களுக்கு முன்பு, 7 இடங்களில் நகை பறிப்பு சம்பவங்கள் நடந்தன. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க மாநகர குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயசீலன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் தனிப்படையினருக்கு கிடைத்த தகவலின்பேரில், பாளையங்கோட்டை திருமால்நகர் குடிசைமாற்று வாரிய காலனியைச் சேர்ந்த அப்துல் ரப்பானி (23), பாளையங்கோட்டை காமராஜர்நகர் 7ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்த செய்யது (31), திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர் (34), மானூர் பள்ளமடையைச் சேர்ந்த ஆதிமூலம் (42) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ. 6 லட்சம் மதிப்பிலான 26 பவுன் நகைகள், 3 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.