பாளையங்கோட்டை தெற்கு கடைவீதி பகுதியில் மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர். அப்போது, வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
பாளையங்கோட்டையில் தெற்குகடைவீதி, மனக்காவலம்பிள்ளை மருத்துவமனை சாலை, தூத்துக்குடி சாலை, திருவனந்தபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் காரணமாக போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து, பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையர் பாஸ்கரன் தலைமையில் தெற்கு கடைவீதியில் மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டனர். கடைகளில் தாழ்வாரங்கள், பதாகைகள், படிக்கட்டுகள் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியோடு இடித்து அகற்றப்பட்டன. அப்போது, முன்னறிவிப்பின்றி நடவடிக்கை எடுப்பதாக வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியது: மாநகராட்சியின் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டிருப்பினும் சிலர் விதிமீறி படிகள் கட்டுதல், பதாகைகள் வைத்தல் போன்றவற்றில் ஈடுபடுவதால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இவற்றை அகற்றும் நடவடிக்கைக்கு முன்னறிவிப்பு தேவையில்லை. இனியும் விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.