திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசியதில், எலக்ட்ரீஷியன் காயமடைந்தார். இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கடையநல்லூர் அருகேயுள்ள மேலக்கடையநல்லூரைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (40). எலக்ட்ரீஷியனான இவர், புதன்கிழமை இரவு மதுரையிலிருந்து கடையநல்லூருக்கு பயணிகள் ரயிலில் சென்றுகொண்டிருந்தார். சங்கரன்கோவில் அருகே, ரயில் மீது மர்ம நபர்கள் கல்வீசியதாகக் கூறப்படுகிறது. இதில், கல் ஒன்று ஜன்னல் வழியே வந்து ஹரிஹரனின் தலையில் விழுந்ததாம்.
காயமடைந்த அவரை அங்கிருந்தோர் சங்கரன்கோவில் ரயில் நிலையத்தில் இறங்கச்செய்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சம்பவம் தொடர்பாக விருதுநகர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.