பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில், "ஊட்டச்சத்துக்கான தொலைநோக்கு சிந்தனை' எனும் தலைப்பில் தேசிய கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கை, கல்லூரி முதல்வர் மு. முஹம்மது சாதிக் தலைமை வகித்து தொடங்கிவைத்தார். ஆட்சிக்குழு உறுப்பினர் எல்.கே.எம்.ஏ. நவாப்ஹூசேன் முன்னிலை வகித்தார். "ஆரோக்கியமான உணவு உட்கொள்வதின் ரகசியம்' எனும் தலைப்பில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர் டி. சுஜாதா வெங்கடேஷ், "நவீன காலத்தில் பிந்தைய உணவுகள் பதிலாக நுண்ணுயிர்கள்' எனும் தலைப்பில் கேரளத்தின் கோழிக்கோடு பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் மதுசூதனன் ஆகியோர் பேசினர்.
கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் பாலின் சுகந்தி விஜயபாரதி, அரசு உதவிப்பெறா பாடப்பிரிவு இயக்குநர் ஏ.அப்துல்காதர் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். துறைத் தலைவர் ஆர். ஸ்வர்ணலட்சுமி வரவேற்றார்.பேராசிரியர் வி. ஏஞ்சல் மேரி நன்றி கூறினார்.