தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இறக்குமதி மணலை பெற முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்ப்டடுள்ளது.
இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட ஆற்று மணல் தொடர்ந்து விற்பனை நடைபெற்று வருகிறது. இதனை முன்பதிவு அடிப்படையில் பொதுமக்கள், கட்டுமானம் செய்வோர் பெறலாம். துறைமுகத்தில் இருந்து முதல்கட்டமாக 11 ஆயிரம் யூனிட் மணல் மட்டுமே வழங்கப்பட உள்ளது. இந்த மணலை பெற TNSAND இணையதளத்திலும், செல்லிடப்பேசி செயலி மூலமாகவும் முன்பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்பவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். TNSAND இல் பதிவு செய்யாத வாகனங்களுக்கும் மணல் வழங்கப்படும். ஒரு யூனிட் மணலின் விலை உச்ச நீதிமன்ற ஆணைப்படி ரூ.9,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.