இந்திய குடிமைப் பணியில் (ஐஏஎஸ்) சேருவதற்கான போட்டித் தேர்வுக்கான ஆயத்தப் பயிற்சிக்கு மீனவ சமுதாய பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மீன்வளத்துறை மற்றும் சென்னை அண்ணா மேலாண்மை பயிற்சி நிலையம் இணைந்து ஆண்டுதோறும் மீனவ கூட்டுறவு சங்க கடல் மற்றும் உள்நாட்டு மீனவ சமுதாயத்தை சேர்ந்த படித்த 20 பட்டதாரி இளைஞர்களை தேர்ந்தெடுத்து தனிக்குழுவாக அமைத்து அவர்களுக்கு இந்திய குடிமைப்பணி போட்டி தேர்க்கான பயிற்சி திட்டத்தை செயல்படுத்திட அரசு ஆணை வழங்கியுள்ளது.
இதில், கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் குழந்தைகள் சேர்ந்து பயிற்சி பெறலாம். விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டுதல்களை மீன்வளத் துறையின் இணையதளத்திலிருந்து (www.fisheries.tn.gov.in) கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், மண்டல மீன்துறை இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களில் அலுவலக வேலை நாள்களில் நேரில் விண்ணப்ப படிவங்களை இலவசமாக பெறலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அக். 5ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிடையாகவோ சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மீன்துறை உதவி இயக்குநர்கள், இணை இயக்குநர் அலுவலகங்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.