கிருஷ்ணாபுரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள பாட்டக்கரை மேலூரைச் சேர்ந்த செல்லையா மனைவி ராஜகனி (54). இவர், தனது மகனுடன் மோட்டார் சைக்கிளில் கிருஷ்ணாபுரம் அருகே கடந்த 13 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார். அப்போது, திடீரென உடல் நலக்குறைவால் ராஜகனி தவறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
முதியவர் சாவு: திருநெல்வேலி நகரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (58). இவர் திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் உள்ள தாமிரவருணி பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் சனிக்கிழமை இரவு தவறி விழுந்துவிட்டாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.
இச்சம்பவங்கள்குறித்து சிவந்திப்பட்டி, திருநெல்வேலி சந்திப்பு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.