திருநெல்வேலி மாநகரப் பகுதியில் தொடர்ந்து இருசக்கர வாகனத்தை திருடியதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருநெல்வேலி நகரம், சந்திப்பு, பாளையங்கோட்டை பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக இருசக்கர வாகனங்கள் திருட்டு போயின. இதையடுத்து மாநகர காவல் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) பெரோஸ்கான் அப்துல்லா உத்தரவின் பேரில் தனிப்படை போலீஸார் இருசக்கர வாகனத்தை திருடியவரை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருநெல்வேலி நகரத்தில் வாகனத் தணிக்கை செய்த தனிப்படையினர், இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் பிடிபட்ட நபர், வல்லநாடு, தம்புராட்டி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த கொம்பையா (எ) குமார்(38) என்பதும், மாநகர பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடியதும் தெரிய வந்தது.
இதையடுத்து திருநெல்வேலி நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து கொம்பையாவை கைது செய்ததோடு, அவர் அளித்த தகவலின் பேரில் 10 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.