ஆசிரியைகளை இடமாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்களின் பெற்றோர் மேலப்பாளையம் அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 282 மாணவர்-மாணவிகள் பயின்று வருகிறார்கள். இங்கு பணியாற்றும் இரு ஆசிரியைகளை பாளையங்கோட்டையில் அரசு சார்பில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு இடமாற்றம் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழக நிர்வாகிகள் தலைமையில் மாணவ-மாணவியரின் பெற்றோர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து மக்கள் கூறியது: 2012 ஆம் ஆண்டு முதல் இப் பள்ளியில் ஆங்கிலவழிக் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளிகளில் பயின்ற குழந்தைகளையும் இங்கு சேர்த்துள்ளோம். ஆனால், ஏற்கெனவே 30:1 என்ற விகிதப்படி ஆசிரியர்களை நியமிக்காத நிலையில், 2 ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்படும். இவ்விஷயத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலையிட்டு ஆசிரியைகளின் பணியிடமாற்றத்தை ரத்து செய்யவேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.