திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர்-காந்திமதியம்மன் திருக்கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு நெல்லையப்பர்-கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி நிகழாண்டுக்கான விழா கடந்த 11 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 4 ஆம் திருநாளில் பஞ்சமூர்த்திகளுடன் சுவாமி-அம்பாள் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதைத் தொடர்ந்து 10 ஆம் திருநாளான புதன்கிழமை செங்கோல் வழங்கும் விழா நடைபெற்றது.
இதற்காக மலர் அலங்காரத்தில் சுவாமி-அம்பாள், சுப்பிரமணியர் ஆகியோர் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு தீபாராதனைக்குப் பின்பு சுவாமியின் திருப்பாதங்கள், செங்கோல் ஆகியவை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. விழாவில் கோயில் செயல் அலுவலர் பா.ரோஷினி மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.