தென்காசி மக்களவைத் தொகுதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசியில் வாக்குப் பதிவு நடைபெறும் பொன்னம்மாள் நடுநிலைப்பள்ளி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட பின் செய்தியாளர்களிடம் ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கூறியதாவது: தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பிரச்னைக்குரிய வாக்குச் சாவடிகள், பதற்றமான வாக்குச் சாவடிகளை பார்வையிட்டேன். பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் மைக்ரோ அப்சர்வர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுவர்.
மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். கூடுதல் துணை ராணுவப் படையினர் பதற்றமான வாக்குச் சாவடிகளில் பணியில் இருப்பார்கள்.
தென்காசி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்புடன் குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்திகுமார் கூறியதாவது: நக்சல்கள் குறித்த தகவல்களை கேரள மாநில காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர். அவர்களது நடமாட்டத்தை கண்காணிக்க மாதம் ஒருமுறை வனப்பகுதிகளில் தேடுதல் வேட்டைகளை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து தீவிரமான கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
மேலும் கொல்லம் மாவட்ட காவல்துறை தனியாக விவரங்களை சேகரித்து வருகின்றது. என்.எஸ்.டி. என்ற பிரிவு தனியாக கண்காணித்து இரு மாநில எல்லையோர மாவட்ட காவல் துறையினரிடம் தொடர்பில் உள்ளனர் என்றார்.