மருங்காபுரி அருகே குடியிருப்புப் பகுதியில் புகுந்த 12 அடி நீள மலைப்பாம்பை பிடிக்க முயன்ற தீயணைப்பு அதிகாரியை கடித்தது.
மருங்காபுரி ஒன்றியம், கல்லுப்பட்டி சமத்துவபுரம் அருகே மல்லிகைமலை குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலில் சுமார் 12 அடி நீள மலைப்பாம்பு கிடந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற நிலைய அதிகாரி (பொ) நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் மலைப்பாம்பை பிடிக்க முற்பட்டனர். அப்போது, நாகேந்திரனின் வலது கை விரலில் மலைப்பாம்பு கடித்தது. இருப்பினும் ஒரு மணி நேர போராட்டத்துக்குப் பிறகு பிடிபட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அங்குள்ள காப்புக் காட்டில் விடப்பட்டது.