திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குள்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் சட்டப்பேரவை உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
துவாக்குடி மற்றும் நவல்பட்டிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செவ்வாய்க்கிழமை காலை சென்ற அவர் அங்கு உள்ள மருத்துவ வசதிகள், நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை வசதிகள், மருத்துவமனைக்குத் தேவைப்படும் இதர வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், தற்போது டெங்கு, பன்றிக் காய்ச்சல் தொடர்பான பாதிப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், காய்ச்சல் தொடர்பாக சிகிச்சை பெற வருவோர் குழந்தைகளாக இருந்தாலும், பெரியவர்களாக இருந்தாலும் யாருக்கும் தாமதம் இல்லாமல் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும். மருந்துகள், மாத்திரைகள் இல்லையெனில் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் மருத்துவமனைக்கு வருவோரைத் திருப்பி அனுப்பக் கூடாது. ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குத் தேவைப்படும் மருத்துவ வசதிகள் குறித்த விவரங்கள் அளித்தால், அதை சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறி பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.